

வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில், நடிகர் மோகன்லால் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது தன்னிடம் ஆறு யானைத் தந்தங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மோகன்லால் இல்லத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், அங்கு சட்டவிரோதமாக இருந்த யானை தந்தங்கள் மற்றும் தந்த சிலைகள் மீட்கப்பட்டது.
இதையடுத்து நான்கு யானை தந்தங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக மோகன்லால் மீது விசாரணை தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முறையான அனுமதியின்றி இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் வைத்திருந்ததாக அவர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ், தனி நபர்கள் தங்கள் வசம் உள்ள வனவிலங்கு பொருட்களின் விவரங்களை அறிவிக்கும்படி கேரள வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி முன்னதாக தன்னிடம் நான்கு யானை தந்தங்கள் இருப்பதாக மோகன்லால் அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஆறு தந்தங்களும், 13 தந்த சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அவர் தெரிவித்தார்.
மோகன்லால் தன்னிடம் இருப்பதாக கூறிய தந்தச் சிலைகளில், கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகிய கடவுளின் உருவச்சிலைகளும் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அதன் எடை சுமார் 46 கிலோகிராம் அளவு இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.