இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

பழைய காலத்து க்ரைம் நாவல்களின் பாணியில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.
Vijay Sethupathi's 'Pocket Novel
Published on

'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனராக முத்திரை பதித்த தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019-ல் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இரட்டிப்பாகியுள்ளது.

'லீலை', 'கொலைகாரன்' மற்றும் 'வதந்தி' வெப் தொடரை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். பழைய காலத்து க்ரைம் நாவல்களின் பாணியில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாகவோ அல்லது மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலோ நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

மாஸ்டர்', 'பேட்ட' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன் இணையும் முதல் முழுநீளத் திரைப்படம் இதுவாகும். இயக்குனர் குமாரராஜா குறித்து அவர் பேசுகையில், "அவர் பல டேக்குகள் வாங்குவார், ஆனால் அதில் ஒரு தெளிவான நோக்கம் இருக்கும். காட்சியை மிக நேர்த்தியாக மாற்றுவதற்காகவே அவர் அப்படிச் செய்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

'மாடர்ன் லவ் சென்னை' தொடருக்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரின் மெகா கூட்டணி இதிலும் இணைந்துள்ளது. யுகபாரதி பாடல்களை எழுத, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் பேனரின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான்-இண்டியா படமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் ஷூட்டிங் நிறைவடைந்ததும், படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com