என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் `மாமன் ஓடும் - சூரியை பாராட்டிய வைரமுத்து
    X

    மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் `மாமன்' ஓடும் - சூரியை பாராட்டிய வைரமுத்து

    • சூரி நடித்துள்ள 'மாமன்' படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என சூரியின் மதுரை ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிட்டனர். இது சூரி கண்ணில் பட அவர்களை கண்டித்தும் வருத்தம் தெரிவித்தும் பேசியுள்ளார். அதில் அவர் "தம்பீங்களா இது ரொம்ப முட்டாள்தனம். எங்கேயோ இருந்துட்டு நாம இப்படி பண்ணுனா என் காதுக்கு வரும் என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்ன்னு அல்லது படம் நல்லா வரணும்னு நீங்க இப்படி பண்ணி இருக்கலாம். ஆனால் ஒரு படம் நல்லா இருந்தா மக்களுக்கு பிடிக்கும், அந்த படம் நல்லா ஓடும். அதை விட்டுட்டு மண் சோறு சாப்டா எப்படி படம் ஓடும்? இது ரொம்ப வேதனையா இருக்கு." என கூறியுள்ளார்.

    சூரியின் இந்த கருத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து அவரது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர்

    "திரைக்கலைஞர்

    தம்பி சூரியைப்

    பாராட்டுகிறேன்

    தனது திரைப்பட வெற்றிக்காக

    மண்சோறு தின்ற ரசிகர்களைப்

    பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்

    மண்ணிலிருந்து தானியம் வரும்;

    தானியம் சோறாகும்.

    ஆனால், மண்ணே

    சோறாக முடியாது

    இந்த அடிப்படைப்

    பகுத்தறிவு இல்லாதவர்கள்

    தன் ரசிகர்களாக இருக்கமுடியாது

    என்று சொல்வதற்குத்

    துணிச்சல் வேண்டும்

    கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்

    தங்கள் ரசிகர் கூட்டத்தை

    இப்படி நெறிப்படுத்தி

    வைத்திருந்தால்

    கலையும் கலாசாரமும்

    மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்

    மண்சோறு தின்றால் ஓடாது

    மக்களுக்குப் பிடித்தால்

    மாமன் ஓடும்

    பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை

    'பலே பாண்டியா'

    என்று பாராட்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×