மார்க் ஆண்டனி விவகாரம்- சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
மார்க் ஆண்டனி விவகாரம்- சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
Published on

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டது.

இதில், இந்தி வெர்ஷனை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என்று மொத்தம் ரூ.6.5 லட்சம் மும்பை சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ 6.5 லட்சம் பணத்தை இரு தவணைகளாக கொடுத்தாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனுடன் பணம் செலுத்திய வங்கி கணக்கு ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து. மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை கைப்பற்றினர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலை சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் நடிகர் விஷால் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com