படத்தின் வெற்றியை சமந்தா முகத்தில் பார்க்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா ஆசை

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் வெற்றியை சமந்தா முகத்தில் பார்க்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா ஆசை
Published on

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் 'குஷி' படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். 'குஷி' படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியதாவது, "செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று உங்களுக்கு 'குஷி'யாக இருக்க வாழ்த்துகள். கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் பணிகள் குறித்து இயக்குனர் சிவாவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் அதையே சொல்கிறார், ''செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை நான் பார்க்க வேண்டும் விஜய் தேவரகொண்டா சகோதரரே''. அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்கிறார். சிவாவுக்கு என் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை என் முகத்தில் பார்க்காமல்.. சமந்தாவின் முகத்தில் பார்க்க வேண்டும்.

இந்தப் படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம் படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்கினோம். முக்கிய பகுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜூலையில் 35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த போது, 'தனக்கு உடல்நிலை சரியில்லை' என்று சமந்தா கூறினார். முதலில் மூன்று நாள் நீடிக்கும் என நினைத்தேன். பிறகு இரண்டு வாரங்களாகும் என்று நினைத்தோம். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மற்றொரு திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் நான் கலந்து கொண்டிருந்த போதுதான் அவரது உடல்நிலை குறித்து அறிந்தேன். ஏனென்றால் கலைஞர்களாகிய நாம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும். எங்கள் துயரங்களை சொல்ல விரும்பவில்லை. சமந்தா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

அவர் மிகவும் போராடினார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் சமந்தா தனது உடல்நிலை குறித்து பேச முன்வந்தார். ஏனெனில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பலர் இதே போன்ற உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நானும் உங்களை போலவே போராடுகிறேன் என்று அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் தனது உடல்நிலை குறித்து வெளிப்படுத்தினார் சமந்தா. இன்று நாம் விளம்பர நிகழ்வுகளை முன்னெடுக்கும் போது பலர் வந்து, 'சமந்தா தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்' என்று கூறுகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு இன்னும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர் இன்று எங்களுக்காக இங்கு வந்து என்னுடன் நடனமாடினார்.

செப்டம்பர் ஒன்றாம் தேதி சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும். மேலும் எங்கள் இயக்குனர் சிவாவிற்கு ஒரு ஹிட் கொடுக்க விரும்புகிறோம். சிவா இந்த திரைக்கதையை 'டியர் காம்ரேட் ' படப்பிடிப்பின் போது சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் காதல் கதைகள் வேண்டாம் என்று நான் ஒதுங்கிக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பில் எத்தனை இடையூறுகள் வந்தாலும் ஒரு நாள் கூட சிவா எதற்கும் குறை சொல்லவில்லை. சினிமாவை விரும்பி சிரித்துக் கொண்டே படத்தை ஹிட்டாக்க வேண்டும் என பணியாற்றினார்.

எங்கள் ஒளிப்பதிவாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் சூப்பர் ஹிட் இசையை கொடுத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 'புஷ்பா- தி ரூல்ஸ்' இருக்கிறது. அவர்களுக்கு முழு பணமும் கிடைக்கும். ஆறு வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை மிகவும் நேசிக்கிறீர்கள். என்னுடைய வெற்றி தோல்வியில் என்னை சுற்றி எத்தனை பேர் மாறினாலும் நீங்கள் மாறவில்லை. நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பை காட்டி, என்னுடன் இருக்கிறீர்கள். செப்டம்பர் ஒன்றாம் தேதி உங்கள் அனைவரின் முகத்திலும் புன்னகையை காண விரும்புகிறேன்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com