சீனிச்சேவு சாப்பிட்ட குழந்தை மாதிரி சிரித்தார் சீனு- வைரமுத்து பதிவு

வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.அந்த வரிசையில் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதுகிறார்.
சீனிச்சேவு சாப்பிட்ட குழந்தை மாதிரி சிரித்தார் சீனு- வைரமுத்து பதிவு
Published on

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

வைரமுத்து தற்போது பல படங்களுக்கு பிசியாக பாடல் எழுதி வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சீனுராமசாமி

நல்லதொரு கதைசொல்லி

அவள் பானை விற்கிறவள்;

இவன் கோழி விற்கிறவன்

பானைக்காரிக்குக்

கோழிக்காரன்மீது

ஒருதலைக் காதல்

அவனோ

வாழ்வில் நொந்துபோனவன்;

பால்யத்தில் நரைத்தவன்

அவளுக்குப் புரிகிற மொழியில்

காதலை நிராகரிக்க வேண்டும்

அதுதான் பாட்டு

ரகுநந்தன் மெட்டுக்கு

வட்டார வழக்கில்

எழுதினேன்

அவரவர் தொழில்வழி

இயங்கியது தமிழ்:

"ஒடைஞ்ச பானைக்கு

ஒலை எதுக்கு? – அடி

அறுத்த கோழிக்கு

அடை எதுக்கு?"

படித்ததும் –

சீனிச்சேவு

சாப்பிட்ட குழந்தைமாதிரி

சிரித்தார் சீனு" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com