அயலான் படத்திற்காக சம்பளத்தை தியாகம் செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அயலான் படத்திற்காக சம்பளத்தை தியாகம் செய்த சிவகார்த்திகேயன்
Published on

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதனிடையே சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்காக சம்பளமே வாங்கவில்லை என செய்தி பரவி வந்த நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், "சம்பளம் வேண்டுமா? படம் ரிலீஸ் ஆகணுமா? என்பது தான் கேள்வியாக இருந்தது. இது ஒரு கனவு. இப்படி ஒரு படம் நம்முடைய ஊரில் நம்மால் பண்ண முடியும். அதுவும் இந்த பட்ஜெட்டில் செய்ய முடியும் என்று தான் ஆரம்பித்தோம்.

நான் இந்த படம் ஆரம்பிக்கும்போது பான் இந்தியா படம் என்கிற வார்த்தையே கிடையாது. அப்போதைக்கு பாகுபலி முதல் பாகம் மட்டும் தான் ரிலீஸாகி இருந்தது. அதன் பின்னர் தான் பாகுபலி 2, கேஜிஎப் போன்ற படங்கள் வந்தது. தமிழில் ஏன் இப்படி ஒரு படம் பண்ண முடியாது என தொடங்கினோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள் இருந்தது. இந்த கனவு நினைவாக என்னுடைய சம்பளத்தை தருவதே ஒரே வழியாக இருந்தது. அதனால் படத்தை முடித்து ரிலீஸ் செய்தாலே போதும் என்பதற்காக எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்" என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com