

கடந்த ஜூன் மாதம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்த ஒன்றாகும். காலத்தால் அழியாத இரு பெரும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் இயற்கை எய்தினர்.
அவர்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக இருந்து சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குனராக பரிணமித்தவர் பாக்யராஜ்.
பாரதிராஜா தனது 16 வயதினிலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் பாக்யராஜ் துணை இயக்குனராக பணியாற்றினார்.
இந்த படம் அடுத்த வந்த பல ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களாக திரையை ஆண்ட ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் முக்கியமான படமாக அமைந்தது. நடிகை ஸ்ரீதேவிக்கும் மைல்கல் படமாக அமைந்தது.
இந்நிலையில் 16 வயதினியே படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், 16 வயதினிலே படப்பிடிப்பு. சப்பாணியை அடித்த பரட்டையை ஸ்ரீதேவி திட்டித் தீர்க்கும் காட்சி. பேசிமுடித்து ரஜினி முகத்தில் காறித் துப்ப வேண்டும்
அந்தக் காட்சிக்காக தயாரித்து வைத்திருந்த சோப்பு நுரை பலமுறை எடுத்தும் முகத்தில் சரியாகப் படியவில்லை.
‘உண்மையாகவே காறித் துப்புங்கள்’ என்கிறார் ரஜினி. ‘ஐயோ மாட்டேன்’ என்று ஶ்ரீதேவி அலறி ஓடிவிடுகிறார்
‘காட்சி உயிர்ப்போடு வரவேண்டும்; நீங்களே துப்புங்கள்’ என்கிறார் பாரதிராஜாவிடம் ரஜினி.
அவர் தயங்கித் தயங்கி ரஜினியின் முகத்தில் குப்பென்று அப்பும்படி காறித் துப்புகிறார்.
பார்வையாளர் முகத்திலும் படியும்படி காட்சி துடிப்போடு பதிவாகிறது.
ரஜினியைக் கட்டிப்பிடித்துக் கைக்குட்டையால் முகம்துடைத்துக் கண்ணீர் சிந்துகிறார் பாரதிராஜா.
இதைப் பக்கத்திலிருந்து பார்த்தவர் பாக்யராஜ். அவரது சுயசரிதைக்கு முன்னுரை எழுதிமுடித்தேன்;
அதில் பதிவாகியிருக்கும் சம்பவம் இது. நடிப்பு என்பது நடிப்பல்ல; அர்ப்பணிப்பு" என தெரிவித்துள்ளார்.