திரையரங்குகளில் விளம்பரம் மூலம் வரும் தொகையிலும் பங்கு வேண்டும் - கே. ராஜன்

திரையரங்குகளை கணினி மயமாக்க வேண்டும்.டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.
கே ராஜன்
கே ராஜன்
Published on

தமிழ்நாடு திரைப்படத்துறைக்கு இன்றைய சூழலில் இருக்கும் சவாலான விஷயங்களில் ஒன்று திரையரங்கத்தில் வெளியாகும் படங்களின் வசூல் உண்மை நிலையை தெரிந்து கொள்வது தான்.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்குள் கருத்து மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1168 திரைகளையும் கணினி மயமாக்க வேண்டும் அப்போது தான் இதை நேர்மையான முறையில் கண்காணிக்க முடியும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.ராஜன் கூறியதாவது, "டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதே எனது கருத்து. இதை கண்காணிக்கக்கூடிய சர்வரை தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், அரசாங்கத்தின் மேற்பார்வையிலும் என இரண்டு இடங்களிலும் வைக்க வேண்டும்.

கே ராஜன்

அப்போது தான் எல்லாம் நேர்மையாக நடக்கும். ஆனால் இங்கே தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் வழக்கம் வந்து விட்டது. ஒரே நபர் கையில் 40 தியேட்டர்கள் இருக்கின்றன. அதேபோல படம் திரையிடுவதற்கு முன்னால் திரையிடும் விளம்பரங்கள் மூலம் வரும் தொகையையும் தருவதில்லை.

எங்கள் படங்களைப் பார்க்க வருவதன் மூலம்தான் விளம்பரங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் அதிலும் தயாரிப்பாளர்களுக்கு பங்கு வேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் தன் கண்காணிப்புக்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு தியேட்டர்களை கணினிமயம் ஆக்க வேண்டும்" என்றார் கே. ராஜன்.

X

Maalai Malar
www.maalaimalar.com