பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா பட பணிகள் தொடக்கம்

பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.
பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா பட பணிகள் தொடக்கம்
Published on

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது, இவர் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்குகிறார்.

மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் இணைந்துள்ளார். மேலும், யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் அஜயன் பாலா, "மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

இயக்குனர் அஜயன் பாலா 'சித்திரம் பேசுதடி', 'பள்ளிக்கூடம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'மனிதன்', 'சென்னையில் ஒரு நாள்', 'லக்ஷ்மி', 'தலைவி', உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com