அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றது.. நடன இயக்குனர் பிருந்தா

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தக்ஸ்’.இப்படபடம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிருந்தா
பிருந்தா
Published on

பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'. இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இதில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'தக்ஸ்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், பத்திரிக்கையாளர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் படத்தின் இயக்குனர் பிருந்தா பேசியதாவது, "ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது.

தக்ஸ் படக்குழு
தக்ஸ் படக்குழு

தக்ஸ் படக்குழு

ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார்.

பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com