கோபத்தால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சொப்பன சுந்தரி படக்குழு
சொப்பன சுந்தரி படக்குழு

சொப்பன சுந்தரி படக்குழு

இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குனர்கள் தான். 'கனா' படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அருண் ராஜா, 'க /பெ ரணசிங்கம்' படத்தை வழங்கிய இயக்குனர் விருமாண்டி, 'சொப்பன சுந்தரி' படத்தை வழங்கிய இயக்குனர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குனர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குனர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும், பிரமிப்பாகவும், காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

இயக்குனர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். அதன் பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குனர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால். அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குனர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

'சொப்பன சுந்தரி' படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால், மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இப்படம் முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. '' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com