நடிகர் விவேக் நினைவாக உருவாகும் 'பீ ஹேப்பி' வனம்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக்.தற்போது விவேக் நினைவாக ‘பீ ஹேப்பி’ வனம் கோவையில் உருவாகி வருகிறது.
விவேக்
விவேக்
Published on

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சிறுதுளி அமைப்பு சார்பில் கோவை பச்சாபாளையத்தில் எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வனத்தை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நடிகர் விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது நினைவாக 'பீ ஹேப்பி' என்ற பெயரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க சிறுதுளி அமைப்பு திட்டமிட்டது. பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையம் சென்ட்ரல் எக்சைஸ் காலனியில் ஒரு ஏக்கர் பரபபில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சிறுதுளி அமைப்பின் 19-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் விவேக்கின் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு பூமி பூஜை பச்சாபாளையத்தில் நடந்தது. விழாவில் பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, சிறுதுளி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விவேக்
விவேக்

விவேக்


இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:- நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து மக்களிடம் சூழல் ஆர்வத்தை விதைத்தவர். சிறுதுளி அமைப்புடன் இணைந்து பல்வேறு சூழல் பணிகளை கோவையில் செய்துள்ளார். அவரின் நினைவாக ஒரு ஏக்கரில் 'பீ ஹேப்பி' வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


நடிகர் விவேக் சினிமா வசனங்களில் பீ ஹேப்பி என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். அந்த வார்த்தையை மையப்படுத்தியே அவரது பெயரில் வனம் அமைய உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com