மதுரையில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்கிய 'சேயோன்'

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார்.
மதுரையில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்கிய 'சேயோன்'
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்ஷன், நகைச்சுவையுடன் கூடிய கிராமப்புற குடும்ப பொழுது போக்கு படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் சில காரணங்களால் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில், ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கியது. அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் தங்களால் இயன்றவரை தீவிரமாக முயன்று வருகின்றனர். இருப்பினும், மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த படப்பிடிப்பு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதால், ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், இப்படம் நவம்பர் மாத தீபாவளி வெளியீட்டிற்கோ அல்லது டிசம்பர் மாதத்திற்கோ தள்ளிப்போகக்கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com