

ஆதரவற்றவரான நாயகன் ஜெய், ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். அன்றைய தினமே மீனாட்சியை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார் ஜெய். இதன்பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்கிறார். அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ரெசாட்டில் தங்குகிறார்கள். அங்கிருந்து வந்த பிறகு ஜெய், மீனாட்சி இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.
மேலும் கருடன் ராம் ரெசாட்டில் ஏதோ மர்மம் இருப்பதையும் ஜெய் அறிந்து கொள்கிறார். ஒரு பக்கம் மீனாட்சியின் தந்தையான அமைச்சர் அஜய், மீனாட்சியை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். மீனாட்சியின் நண்பர் சொத்துக்காக மீனாட்சியை திருமணம் செய்ய நினைக்கிறார்.
இவ்வளவு பிரச்சனையில் ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜெய், ஐடி ஊழிய இளைஞராக நடித்து கவர்ந்து இருக்கிறார். காதல், நடனம், நடிப்பு, அழுகை, பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக நாயகி மீனாட்சி உடன் ரொமான்ஸ் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் மீது பாசம், தந்தை மீது வெறுப்பு, நண்பன் மீது கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கருடன் ராம். இவருக்கு இணையாக வில்லனிசம் செய்து இருக்கிறார் அஜய். யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.
கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபு விஜய். காதல், கிரைம், ஆக்ஷன், திரில்லர் என திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. மெதுவாக தொடங்கும் திரைக்கதை இறுதியில் வேகம் எடுத்து இருக்கிறது. கொஞ்சம் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.