

நடிகர் ரவி மோகன் சென்னையில் நடைபெற்ற JFW விருது வழங்கும் விழாவில், தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சைகளுக்குப் பிறகு முதல்முறையாக மேடையில் மண்டியிட்டு ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்து அறிவிப்பைத் தொடர்ந்து, ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் பொது விவாதத்திற்குள்ளானது.
இச்சூழலில் இந்த விருது மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அவர், சினிமாவில் தனது 23 ஆண்டு காலப் பயணத்தை நினைவு கூர்ந்தார்.
தனது 46 வயதில் பாதி வாழ்க்கையை சினிமாவிற்காகவே அர்ப்பணித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் எடுத்த ஒரு உணர்ச்சிகரமான தவறான முடிவு, தன்னை ஆதரித்த பலரைக் காயப்படுத்திவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.
ரசிகர்களினதும் திரையுலகினரினதும் ஆதரவே தன்னைத் திரையுலகை விட்டு விலகும் எண்ணத்திலிருந்து தடுத்ததாகக் கூறிய ரவி மோகன், மேடையில் மண்டியிட்டு, "இனி ஒருபோதும் சினிமாவையோ, என்னை நேசிக்கும் ரசிகர்களையோ ஏமாற்ற மாட்டேன்" என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் சந்தோஷ், குமரன், துருவன், தனி ஒருவன், பொன்னியின் செல்வன், கராத்தே பாபு போன்ற தனது மறக்க முடியாத கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு, நிச்சயம் ஒரு சிறந்த கம்பேக் கொடுப்பேன் என உருக்கமாகப் பேசினார்.
இந்தச் சர்ச்சைகளின் மூலம் மனநலம் குறித்த விவாதங்கள் சமூகத்தில் உருவானது தனக்கு நிம்மதியளிப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். தற்போது ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' திரைப்படப் பணிகளில் பிஸியாக உள்ளார்.
இது தவிர, லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் அங்கமான 'பென்ஸ்' , ஆகஸ்ட் 28 அன்று வெளியாகவுள்ள 'கராத்தே பாபு', மற்றும் 'ஜினி', 'ப்ரோ கோட்' (உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்கள் அவரது கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.