

‘டான் 3’ படத்தில் இருந்து ரன்வீர் சிங் திடீரென விலகினார். அவரது நடவடிக்கைக்கு மேற்கிந்திய சினிமா ஊழியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து பேசுவதற்காக 3 முறை ரன்வீர் சிங்கை அழைத்தும் அவர் பதில் அளிக்கவில்லை. ரன்வீர் சிங் குறித்து ‘டான் 3’ பட இயக்குனர் பர்கான் சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பில் புகார் அளித்தார்.
புகாரில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான ஓட்டல் முன்பதிவுகள் வெளிநாட்டு பயண முன்பதிவுகள் மற்றும் படம் தயாரிப்புக்கு முந்தைய அனைத்து செலவுகளும் சேர்ந்து ரூ.45 கோடி ஆகிறது.
‘டான் 3’ படத்தின் முந்தைய பணிகள் அனைத்தும் ரன்வீர் சிங் முன்னிலையில் தான் நடந்தது. படத்தின் விளம்பர காட்சியும் அவரை கொண்டே படமாக்கப்பட்டது. இந்நிலையில் ரன்வீர்சிங் படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் பட நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என புகாரில் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி கூட்டமைப்பு ரன்வீர் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஸ்பாட் பாய்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள எங்களின் எந்த ஒரு தற்போதைய பணியாளரும் ரன்வீர் சிங்குடன் பணியாற்ற மாட்டார்கள் என கூட்டமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியானது.
இந்தக் கூட்டமைப்பில் 5000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் 32 இணைக்கப்பட்ட கைவினை சங்கங்களும் இருப்பதால் கூட்டமைப்பின் முடிவு ரன்வீர் சிங்கின் எதிர்கால திட்டங்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.