

'மண்டேலா' படத்தின் மூலம் தேசிய விருதை வென்று, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
ஒரு சாதாரண கார்ட்டூனிஸ்ட், விபத்திற்குப் பின் தனக்கு மட்டும் கேட்கும் ஒரு 'அசரீரி' குரலால் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறான் என்ற வித்தியாசமான கற்பனை மற்றும் சமூகக் கருத்துக்களோடு வெளியான இப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, படத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த 'அசரீரி' குரலுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.
படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ‘மாவீரன்-2’ படத்தின் கதையை மடோன் அஸ்வின் எழுதத் தொடங்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘மாவீரன்-2’ படத்தின் படப்பிடிப்பு 2028-ம் ஆண்டு தொடங்கும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. ‘மாவீரன்-2’ படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ‘மாவீரன்-2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.