கம்பேக் கொடுத்த சசிகுமார்: வெப் சீரிஸாக மாறும் பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’!

பிரம்மாண்டமான தயாரிப்பில், சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உலகத் தரத்தில் இந்த வெப் சீரிஸ் உருவாகிறது.
 Kuttra Parambarai-sasikumar
Published on

தமிழ் சினிமா ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பான 'குற்றப்பரம்பரை' கதையை மையமாகக் கொண்ட வெப் சீரிஸ் குறித்த அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. பல்வேறு தடைகளையும் சட்டப் போராட்டங்களையும் தாண்டி, இத்தொடர் தற்போது பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

'சுப்பிரமணியபுரம்', 'ஈசன்' போன்ற தரமான படங்களை இயக்கி, பின்னர் முழுநேர நடிகராக மாறிய சசிகுமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்தொடரின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்குகிறார். பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவருக்குமே நெருக்கமானவரான சசிகுமார், இக்கதையை இயக்குவது சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமான தயாரிப்பில், சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உலகத் தரத்தில் இந்த வெப் சீரிஸ் உருவாகிறது. 19-ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வரும் வகையில் பிரம்மாண்டமான செட்கள் மூலம் அந்தப் பழைய உலகம் மீண்டும் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளது.

பாரதிராஜாவின் ஆஸ்தான எழுத்தாளரான ரத்னகுமார் இத்தொடருக்கான விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி வருகிறார். இத்தொடரின் மிக முக்கியமான, வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'குற்றப்பரம்பரை சட்டம்' மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வீரத்தையும், அவர்கள் சந்தித்த வலியையும் பேசும் ஒரு மிக உன்னதமான வாழ்வியல் கதையாக இது அமையவுள்ளது. தமிழ் ஓடிடி மற்றும் சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல்கல் வெப் சீரிஸாக இதனை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com