தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த எச்.வினோத்: ராஜு ஜெயமோகன்-துஷாரா விஜயன் இணையும் 'ஆல்மோஸ்ட் நல்லவன்'!

எச்.வினோத் தயாரிப்பாளராக மாறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
H. Vinoth Turns Producer
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் எச்.வினோத், தற்போது தயாரிப்பாளராகத் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள 'ஆஸ்பையர் உபுண்டு ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தைப் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான 'பேஷன் ஸ்டுடியோஸ்' சாய் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் படப்பிடிப்புத் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குனராகவும் நாயகனாகவும் ராஜு ஜெயமோகன்:

விஜய் தொலைக்காட்சியின் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 5' மற்றும் 'குக் வித் கோமாளி சீசன் 6' ஆகிய பிரம்மாண்ட நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கைப் பெற்ற ராஜு ஜெயமோகன், இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, கடந்த ஆண்டு வெளியான 'பன் பட்டர் ஜாம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்த ராஜு, இந்த 'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

நட்சத்திரப் பட்டாளம்:

'சார்பட்டா பரம்பரை', 'ராயன்' போன்ற திரைப்படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள துஷாரா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இந்தியத் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி நடிகரான சத்யராஜ், இப்படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தரமான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்குப் புதிய திறமையாளரான பாக்ஸ்ன் இசையமைக்கிறார். டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, முன்னணி படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

எச்.வினோத்தின் புதிய மைல்கல்:

2014-ல் 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 'தீரன் அதிகாரம் ஒன்று', மற்றும் அஜித் குமாருடன் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் எச்.வினோத், தற்போது தளபதி விஜய்யின் 'ஜனநாயகம்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் வேளையில், தயாரிப்பாளராக மாறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்-இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இயக்குனர் எச்.வினோத்தும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்குப் இரட்டை ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளார்.

'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் கதைக்களம் மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com