

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது. இதன் 2-ம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19-ல் வெளியாகி முதல் படத்தைப் போல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படம் வெளியான 7 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஸ்பை திரில்லர் படம் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
சீன திரைப்படமான 'பெகாசஸ் 3' (Pegasus 3) இந்த ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் ரூ. 5,900 கோடிக்கும் அதிகமான வசூலைத் தாண்டியுள்ளது.