ஜூலை 31-க்குள் வெளியாகிறது 'துருவ நட்சத்திரம்'? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குறிப்பிட்ட தேதிக்குள் படம் வெளியானால் 9 ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
Dhruva Natchathiram
Published on

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், நிதிப் பற்றாக்குறை மற்றும் தயாரிப்பாளர்களுடனான சட்டப் போராட்டங்கள் காரணமாக பல வருடங்களாகத் தள்ளிப்போனது. முன்னதாக, ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் நிதிச் சிக்கல்களை முழுமையாகத் தீர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கூடுதலாக அவகாசம் கேட்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று, துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட ஜூலை 31 வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த அடுத்தகட்டப் பச்சைக் கொடியால் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் படம் தியேட்டருக்கு வந்துவிடும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com