‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன்.15க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி!

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15க்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன்.15க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி!
Published on

கவுதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், டிடி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் துருவ நட்சத்திரம்.

இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மதன், இயக்குனர் கவுதவ் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்பான நிதிப் பிரச்சினை காரணமாக, துருவ நட்சத்திரம் படத்தில் உள்ள தனது 50 சதவீத உரிமையை புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கு மதன் வழங்கினார்.

இச்சூழலில் கடந்த 2023ல் படத்தை வெளியிட கவுதம் வாசுதேவ் மேனன் முயற்சித்தபோது, தங்களுக்கு சேரவேண்டிய தொகையை தராமல் படத்தை வெளியிட கூடாது என புண்ணியமூர்த்தியும், பிரேம்குமாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்துக்கு தடை உத்தரவு பெற்றனர்.

அப்போதிலிருந்து பலமுறை முயற்சித்தும் படம் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் இதன் வெளியீட்டிற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் இப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்தின் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க ஒரு வழக்கறிஞர் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார். வருவாய் முறையாகப் பகிரப்படுவதை உறுதி செய்ய ஒரு பிரத்யேக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடக்கூடாது எனவும் மனுதாரர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், அதற்கான காரணங்களுடன் கால நீட்டிப்பு கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com