தனது மார்பிங் படங்களை பரப்பிய 20 வயது தமிழக பெண் - அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு

கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன். சம்பந்தப்பட்ட நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார்.
தனது மார்பிங் படங்களை பரப்பிய 20 வயது தமிழக பெண் - அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து என்னைப் பற்றியும், என் குடும்பத்தினரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களைப் பற்றியும் மிகவும் தவறான தகவல்களை பரப்பி, அதில் என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை டேக் செய்வதும் எனக்குத் தெரிய வந்தது.

அந்தப் பதிவுகளில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுபோன்று ஆன்லைனில் என்னை டார்கெட் செய்வதை பார்ப்பது மிகவும் வருத்தமாக இருந்தது.

மேலும் இதுகுறித்து விசாரிக்கையில், அந்த நபர், என்னைப் பற்றி தொடர்ந்து வெறுப்பைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் பல போலி கணக்குகளை உருவாக்கியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அறிந்ததும், நான் உடனடியாக கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன். அவர்களின் உதவியுடன், இந்த செயல்களுக்கு பின்னால் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் இந்த செயலின் பின்னல் உள்ளார் என்பது எனக்கு தெரிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இளம் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவளுடைய அடையாளத்தை வெளியிட நான் விரும்பவில்லை.

இருப்பினும், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் பிறரை துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ அல்லது வெறுப்பைப் பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது.

ஆன்லைனில் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச்செல்கிறது. இது தொடர்பாக நான் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் சம்பந்தப்பட்ட நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார். சைபர் தொல்லை என்பது தண்டனைக்குரிய குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com