

2017-ஆம் ஆண்டு வெளியான `மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் `ஆடை', `குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் `மாஸ்டர்', `விக்ரம்', `லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் `ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீ-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இந்தப் படம் "29" என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் "சீலே சீலே" பாடல் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் 29 படத்தின் 2-வது சிங்கிள் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா புகைப்படம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு இந்த பாடலுக்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. இத்துடன் "Wake up Silk nation" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
29 திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை ஆர்.எஸ். சதீஷ் குமார் மேற்கொண்டுள்ளார்.