Azhagiya kanne
Azhagiya kanne(2.75 / 5)
கதைக்களம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் லியோ சிவகுமார் வாழ்ந்து வருகிறார். இவர் சமூக பிரச்சினைகளை நாடகங்களாக மக்களுக்கு போட்டு வருகிறார். லியோ சிவகுமார், தன் வீட்டிற்கு எதிரில் வசித்து வரும் சஞ்சிதா ஷெட்டி மீது காதல் கொள்கிறார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மந்தம் தெரிவிக்க சஞ்சிதா ஷெட்டியின் சித்தி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவரின் தம்பியை சஞ்சிதாவுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததால் அவர் கோபமடைகிறார். இதனிடையில் இதனை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது.லியோ சிவகுமாரும் இயக்குனர் ஆகும் கனவில் ஓடிக்கொண்டிருக்கிறார்.
இறுதியில் லியோ சிவாகுமார் ஆசைப்படி இயக்குனர் ஆனாரா? எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவர்களை அவர்கள் என்ன செய்தார்கள்? அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பித்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அறிமுக நாயகன் லியோ சிவகுமார் புதுமுக நடிகர் என்ற எண்ணம் தோன்றாதது போன்று நடிப்பை கொடுத்துள்ளார். இயல்பான நடிப்பால் அனைவரையும் லியோ சிவகுமார் கவர்ந்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி காதலி, அழகான மனைவி என நடிப்பில் வித்யாசம் காட்டி கவனம் பெறுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி படத்தில் இருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இருவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. இவர்களின் கதாப்பாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கலாம்.
இயக்கம்
தமிழ் சினிமாவில் தோன்றிய பழைய கதையை காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆர்.விஜயகுமார். திரைக்கதையில் பிடிப்பு இல்லை. குழந்தை பிறந்ததற்கு பிறகு பழிவாங்க தேடினாலும் அதனை சம்மந்தமே இல்லாமல் இறுதியில் மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது.
கதையை விட்டு திரைக்கதை விலகி சென்றிருப்பது படத்திற்கு பெரிய பாதிப்பு. இருந்தும் குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் மூதாட்டிக்கும் குழந்தைக்குமான காட்சிகளை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளார். இந்த மார்டன் சமூகத்தில் குழந்தையை தாய் வளர்க்க வேண்டும் என்பதை இந்த சில காட்சிகள் உணர்த்துகிறது.
இசை
கிராம வாழ்வியலை பின்னணி இசையின் மூலம் அழகாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் அசோக் குமார் கொடுத்த வேலையை செய்து முடித்துள்ளார்.
படத்தொகுப்பு
சங்க தமிழன் படத்தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
புரொடக்ஷன்
எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் ‘அழகிய கண்ணே’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

