ரிஷபம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

குருவின் ஐந்தாம் பார்வை ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது.
ரிஷபம்
ரிஷபம்
Published on

ரிஷப ராசிக்கு குரு பகவான் 8,11ம் அதிபதியாக உள்ளார். இதுவரை ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் நின்று பணம் கொடுத்த குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு செல்கிறார்.இது வெற்றி மேல் வெற்றியை தரக்கூடிய காலகட்டம் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது.அடுத்த அடி எடுத்து வைக்கக்கூடிய நல்ல மாற்றங்கள் உருவாகும் காலம்.

தனது ஐந்தாம் பார்வையால் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தையும் பார்க்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார். இதனால் ரிஷப ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.

முயற்சி குருவின் பொதுவான பலன்கள்

இதுவரை தன ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்திற்கு வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இது ரிஷப ராசியினருக்கு புதிய முயற்சிகளில் வெற்றி பெறக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கி தரப் போகிறார். இதனால் உங்களின் புகழ் அந்தஸ்து கௌரவம் உயரும். பொருளாதார நிலை சாதகமாக இருப்பதால் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் சமாளிக்க கூடிய மனவலிமை மனப்பக்குவம் உருவாகும்.

ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது. சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகி திருமண தடை அகலும். இதுவரை காதல் திருமணத்திற்கு தடை விதித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். திருமணம் ஆன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ்வார்கள். விவாகரத்து வழக்குகள் தள்ளுபடி ஆகும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணை ஆகியவர்களால் சகாயமான பலன்கள் நடக்கும்.

ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் ஏழாம் பார்வை ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. தந்தை தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.ஜாதகத்தில் மீள முடியாத பித்ரு தோஷம் உள்ளவர்கள் தில ஹோமம் செய்து பாக்கிய பலன்களை அதிகரிக்க முடியும். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே தனது முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்ய வேண்டும். இதை செய்வதால் குடும்பத்தில் நிம்மதி கூடும். தடைபட்ட திருமணம் குழந்தை பாக்கிய பிராப்தம் சீராகும். கடன் தொல்லைகள் சீராகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

உடல் ரீதியான மனரீதியாக இருந்த பிரச்சனைகள்சீராகி நிம்மதியாக இருப்பீர்கள்.சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல குணத்தை புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. ஒருவரின் விருப்பங்களை ஆசைகளை நிறைவு செய்யக்கூடிய இடம் 11ஆம் இடமான லாப ஸ்தானமாகும். தற்போது கோச்சார குருவின் பார்வை பதினொன்றாம் இடத்தில் பதிவதால் உங்கள் வாழ்நாள் லட்சியங்கள் எண்ணங்கள் கனவுகள் அனைத்தும் பலிதமாகும். அதை நிறைவேற்றக்கூடிய நல்ல நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.பேங்கிங் ஆடிட்டிங் டீச்சிங் வட்டி தொழில் ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்சன் துறை ஆகியவற்றில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். இதுவரை சிறிய லாபம் பார்த்தவர்கள் இனி பெரிய லாபத்தை பார்க்கத் துவங்குவார்கள்.சிறு தொழில் செய்தவர்கள் அதிக முதலீட்டில் தொழிலை நடத்துவார்கள்.

மூத்த சகோதரன் சித்தப்பா விடம் இருந்து வர வேண்டிய பணங்கள் வசூல் ஆகும். மருமகன் மருமகளால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகள் சீராகிவிடும்.இதுவரை பார்க்காத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கப் போகின்றது. அதிக பணம் கிடைக்கும் காலங்களில் அதை சேமித்து வைத்தால் பிற்காலத்திற்கு உபயோகமாக இருக்கும். அவசியமான விஷயம் அறிந்து செயல்பட்டால் இந்த குருப் பெயற்சி வரமாக மாறும்.

புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்

(2.6.2026 முதல் 18.6.2026 வரை)

ரிஷப ராசிக்கு 8 ,11ம் அதிபதியான குருவின் புனர்பூச நட்சத்திர சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் விபரீத ராஜயோகமான அதிர்ஷ்ட பணம், பொருள், உயில் சொத்து, காப்பீட்டு பணம், உழைக்காத வருமானம் போன்றவைகள் கிடைக்கும். இந்த 16 நாட்களில் வரா கடன்களை வசூலிக்கு முயற்சி செய்யலாம்.

வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.அரசிடம் இருந்து வீடு வீட்டு மனை அல்லது வீடு கட்ட தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.பணத்தட்டுப்பாடுகள் நீங்கி பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.6.2026 முதல் 19.8.2026) வரை

ரிஷப ராசிக்கு 9,10ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில்குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில்மிக மிக அதிர்ஷ்டமான பாக்கிய பலன்களை அடைவீர்கள்.பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் வருமானம் பல விதங்களில் கூடும்.குல இஷ்ட தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

பூர்வீகச் சொத்து மூலமாக வருமானம் கிடைக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் அகலும்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)

ரிஷப ராசிக்கு 2,5ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும் பயிற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.வருமானம் பல வழிகளில் வரத்துவங்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் மனம் செல்லும். பங்குச்சந்தை லாபம் மகிழ்ச்சியை இரட்டிக்கச் செய்யும்.குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் சீராகும்.உயிர்கல்வியில் நிலவிய தடைகள் அகலும். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். வீடு வாகன யோகம் உண்டாகும். வாழ்க்கையில் நிலவிய அனைத்து சங்கடங்களும் சீராக துவங்கும்.

26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பெரிய பணப்பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். சிறு சிறு மனநல உடல்நல பாதிப்புகள் வரலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் கண்காணிப்பது மிக அவசியம். வருமான வரி விற்பனை வரி கணக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும்.அரசின் சட்ட திட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(1.11.2026 முதல் 13.12.2026 வரை)

அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைகிறார். தொழில் உத்தியோகத்தில் ஏற்ற இறக்கமான பலன்கள் நடக்கலாம்.முக்கிய ஆவணங்கள் நகைகள் பணங்களை பத்திரமாக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மாற்றம் ஏற்படலாம். அரசியல் பிரமுகர்கள் அரசாங்க ஊழியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.முன்னோர்களின் பரம்பரை நோய் தாக்கம் அதிகரிக்கும்.

14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.

பெண்கள் பழைய தங்கத்தை புதிய தங்கமாக மாற்றும் முயற்சியே தவிர்க்க வேண்டும். மிகப்பெரிய முதலீட்டாளர்கள் புதிய ஒப்பந்தத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும்.அரசு சார்ந்த வங்கிகளில் உபரிப் பணத்தை சேமிப்பது நல்லது.தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வாழ்க்கையில் வெற்றி அடைய முறையான திட்டமிடுதல் அவசியம்.மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

பரிகாரம்

ரிஷப ராசியினர் வெள்ளிக்கிழமை வீட்டில் கல் உப்பு வாங்கி வைக்க பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். சுவாமி மலையில் அருளும் சுவாமிநாத சுவாமியை வழிபட்டு வர பலவிதமான நன்மைகள் கைகூடும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com