search icon
என் மலர்tooltip icon

    மேஷம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    மேஷம்- தன குரு 70%

    பேராற்றல் நிறைந்த மேஷ ராசியினரே!

    இதுவரை ஜென்ம ராசியில் நின்று பல்வேறு பாக்கிய பலன்களை வழங்கிய குருபகவான் மே 1 முதல் ராசிக்கு 2ம்மிடமாகிய தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார்.இந்த ஒரு வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

    இந்த கால கட்டத்தில் ராகு பகவான் 12ம்மிடமான அயன, சயன, மோட்ச ஸ்தானத்திலும் கேது பகவான் 6ம்மிடமான ருண, ரோக. சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

    தன குருவின் பொதுபலன்கள்

    மேஷ ராசிக்கு பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதியான குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகமிக மேலான கிரக நிலை எனலாம். இது அபரிமிதமான வளர்ச்சிக்கு உரிய இடமாகும். இதில் பாக்கியாதிபதி குரு அமரும்போது வருமானம் பெருகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

    அதே நேரத்தில் ஒரு மனிதனின் முன்னேற்றம் என்பது பணவரவு மட்டுமல்ல. நிலையான வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தேவையான தன்னம்பிக்கை, எதையும் சாதித்து முடித்து விடலாம் என்ற மனோதிடம், சிந்தனை மற்றும் செயல்பாட்டில் உத்வேகம், நேர்மறை எண்ணங்கள் போன்றவற்றை ஒருங்கே வழங்கப் போகிறார். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வாக்கிற்கு ஏற்ப துணிந்து எதிர்கால நலனுக்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

    உங்களை ஏளனம் செய்தவர்கள் வியக்கும் வகையில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்படப் போகிறது. நம் வாழ்க்கையில் என்றாவது விடிவு காலம் பிறக்காதா என்ற ஆவலுடன் வாழ்ந்தவர்களுக்கு விடியல் துவங்கிவிட்டது.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

    தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் 5ம் பார்வை ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வைக்கு சுபத்துவம் அதிகம் என்பதால் முதலில் அடிப்படை தேவைகளில் மூன்றாவது தேவையான வீட்டை கடன் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பார்.

    ஏற்கனவே சொந்த வீட்டில் வசிப்பவர்கள் வீட்டை புதுப்பித்து விரிவாக்கம் செய்ய கடன் பெறலாம் அல்லது பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அல்லது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக கல்விக்கடன் பெறலாம். அல்லது திருமணம் போன்ற சுப விசேஷங்களுக்காக கடன் ஏற்படும். சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் கடனை அதிகரிப்பார்கள்.

    சிலருக்கு கடனுக்கு பயந்து வைத்தியச் செலவு வரும். சில அரசியல் பிரமுகர்கள் பதவி ஆசையில் தகுதிக்கு மீறி கடன் பட்டு எலக்சன் செலவு செய்து எதிரியையும் கடனையும் அதிகரிப்பார்கள். 6 ம்மிடம் கடன், எதிரி, நோய் ஸ்தானம் மட்டுமல்ல. உத்தியோக ஸ்தானமும் 6ம்மிடம்தான். இதுவரை நல்ல உத்தியோகம் இல்லாமல் மன உளைச்சலை சந்தித்தவர்களுக்கு நிம்மதியான மன நிறைவான வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு என சிறப்பான உயர்வு உண்டு.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

    குருவின் 7ம் பார்வை ராசிக்கு 8ம்மிடமான திடீர் அதிர்ஷ்டம் ஆயுள், நஷ்டம், அவமானம், அபகீர்த்தி ஸ்தானத்தை பார்க்கிறது. ஏற்கனவே சொன்னது போல் குருவின் பார்வை சுபமானது. பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். படுக்கையில் இருந்தவர்களுக்கு கூட நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். நோயை வெல்ல முடியும் என்ற மன தைரியம் கூடும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் வந்த சுவடு தெரியாது.

    குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. காலத்தால் அவமானப்படுத்திய வழக்குகளிருந்து விடுபடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம், உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும்.

    சிலருக்கு நீச வழியில் பொருளும் பிறரின் சொத்தும் கிடைக்கும். சிலர் பெரும் பண ஆசையால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து நீதிமன்றம் செல்ல நேரும் அல்லது சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

    பெரும் தொழில் அதிபர்கள் அரசிற்கு முறையான வருமான வரி, விற்பனை வரி போன்றவற்றை தாக்கல் செய்வது நல்லது. சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பும் கிடைக்கும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

    குருவின் 9ம் பார்வை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. ஒரு மனிதனை சமுதாயத்தில் தலை நிமர்ந்து நிற்கச் செய்வது தொழில். இப்போது தொழில் ஸ்தானத்தை பார்க்கும் குரு தொழில் முன்னேற்றம் குறித்த கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவார்.

    தொழில் மூலம் புகழ் அந்தஸ்து, கவுரவம் உயரும். சமுதாயத்தில் தொழில் துறையில் முன்னிலையில் இருப்பவர்களின் நட்பு, அறிமுகம் கிடைக்கும். சிலர் கடன் பட்டு புதிய தொழில் துவங்கலாம்... சிறிய முயற்சியால் வெற்றியும்,சாதனையும் படைப்பீர்கள் தொழில் வளம் பெருகும். கூட்டுத் தொழிலில் நிலவிய சண்டை சச்சரவுகள் விலகும்.

    சோதனைகள் சாதனைகளாக மாறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவர்களுக்கு தொழில் தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் அதிகரிக்கும். தொழில் எதிரிகள் விலகுவார்கள். தொழில் தொடர்பாக மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகி எதையும் சமாளிக்கும் மன தைரியம் பெரும். குல, இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்றுவர நீங்கள் போட்ட திட்டங்கள் பலிதமாகும்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

    மேஷ ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவுரவப் பதவிகள், மந்திர உபதேசம் பங்குச் சந்தை ஆதாயம், புத்திர பிராப்தம், உழைப்பு இல்லாத வருமானம், புதிய நட்பால் காதல் உருவாகுதல், பிள்ளைகளின் சுப விசேஷங்கள், பூர்வீகச் சொத்தால் ஆதாயம் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

    மேஷ ராசிக்கு 4ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நில புலன்கள், உயர்ரக 2,4 சக்ர வாகனங்கள் சேரும். இது வரை சொந்த வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு சொந்த வீடு, வாகனம் அமையும். விற்க முடியாமல் கிடந்த சொத்துகளுக்கு நல்ல விலை கிடைக்கும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். தடைபட்ட குத்தகை வருமானம் வசூலாகும். தாயின் அன்பு ஆசீர்வாதத்தில் மனம் லயிக்கும்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் 21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை

    மேஷ ராசியின் அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கெளரவம் புகழ், அந்தஸ்து உயரும். ஆயுள் பயம் விலகும். நல்ல பழக்க வழக்கம் உண்டாகும். நன்மை, தீமையை பகுத்தாயும் திறன் மேம்படும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். ஆன்ம பலம் பெருகும்.

    குருவின் வக்ர காலம்

    மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை வக்ரமடையும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். வெளிநாட்டு பயணத்தில் மாற்றம் உண்டாகும்.

    உத்தியோகம், தொழில் போன்றவற்றில் புதிய மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். வீண், வம்பு, வழக்கு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் புதிய சொத்து வாங்குதல். விற்றல் போன்றவைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.சொத்திற்காக தெரியாத நபரை நம்பி முன்பணம் கொடுக்க கூடாது. தாய் வழி உறவுகளிடம் அன்பாக பழக வேண்டும்.

    மாணவர்கள்

    ஒரு மனிதனிடம் உள்ள சொத்துக்களில் திருடப்பட முடியாத சொத்து கல்வி. 4ம்மிடமான கல்வி ஸ்தானத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பது மிகப் பெரிய நல்ல அமைப்பு. அதனால் கோட்சார கிரகங்களால் கல்விக்கு எந்த தடையும் இருக்காது. படிக்கும் ஆர்வம் கூடும். உயர் கல்விக்குத் தேவையான கடன் உதவி வங்கிகள் மூலம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று கல்வி கற்றும் வாய்ப்பும் உள்ளது. 2025ல் பொதுத் தேர்வு எழுதும் மேஷ ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவார்கள்.

    பெண்கள்

    மேஷ ராசிப் பெண்களுக்கு இது வாழ்வியல் மாற்றம் தரும் குருப்பெயர்ச்சியாகும். இதுவரை நிலையான உத்தியோகம், தொழில் இல்லாமல் கவலையடைந்த பெண்களுக்கு நிலையான நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உங்களை உற்சாகப்படுத்தும். தொழில் வளர்ச்சி மற்றும் குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். விண்ணப்பித்த கடன் தொகையும் வந்து சேரும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும். கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    பரிகாரம்

    தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் மேன்மையான பலன்களை அடைய வியாழக்கிழமை மாலை 5.30 - 6 மணிக்குள் குபேர லஷ்மியை வழிபட பலன்கள் இரட்டிப்பாகும்.

    ×