உலகம்

சீனாவுக்கு எதிராக விரைவில் போராட்டம்- இலங்கை எம்.பி. தகவல்

Published On 2022-12-04 04:57 GMT   |   Update On 2022-12-04 04:57 GMT
  • இலங்கை மக்களுடன் உண்மையிலேயே நிற்க விரும்பினால் கடன் மறு சீரமைப்பு செயல் முறைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.
  • சீனாவின் தலையீடு இலங்கையின் இறையாண்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

கொழும்பு:

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதனால்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த 30-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம் பேசும் போது, சீனா இலங்கையின் நட்பு நாடு அல்ல. அது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் நண்பன்.

இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுடன் உண்மையிலேயே நிற்க விரும்பினால் கடன் மறு சீரமைப்பு செயல் முறைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளை சீனா முடக்கியது என்று தெரிவித்தார். இதற்கு இலங்கையில் சீன தூதரகம் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டது.

இந்த நிலையில் இலங்கையில் சீனாவுக்கு எதிரான போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சாணக்கியன் ராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களுக்கும் சீன தூதரகத்துக்கும் என்ன சம்பந்தம்? எனது கருத்துக்கள் பற்றி டுவிட்டரில் பேசுவதற்கு சீன தூதரகத்துக்கு என்ன வேலை?

சீனாவின் தலையீடு இலங்கையின் இறையாண்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. டுவிட்டர் போரை தொடங்க நினைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். சீனர்களை எச்சரிக்க விரும்புகிறேன். சீன தூதரகமும் அதன் அரசாங்கமும் இலங்கை நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்காவிட்டால் மற்றும் கடன்களை மறுசீரமைக்க 'சீனா கோ ஹோம்' (சீனா வெளியேறு) போராட்டம் விரைவில் தொடங்கப்படும்.

அதற்கு நான் தலைமை தாங்குவேன். மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவால் இலங்கையின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியவில்லை

இலங்கையின் பொருளாதார நிலைைமயை அறிந்திருந்தும் சீன அரசு இலங்கைக்கு கடன் வழங்கி வருகிறது. இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை அறிந்துள்ள சீனா கடன் பொறிக்குள் சிக்க வைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News