சம்பளம் வழங்காததை கண்டித்து மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தர்ணா

இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர். துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்.
Published on
<p>துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தால் பாரதியார் தெருவில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளன.</p>

மதுரை:

தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை நகரில் 100 வார்டுகள் உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாள்தோறும் இங்கு டன் கணக்கில் குப்பைகள் குவிகின்றது. இதனை அப்புறப்படுத்த வார்டு வாரியாக நிரந்தர மற்றும் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சியில் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள தொகையை உடனே வழங்கக்கோரி மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் அலுவலக நுழைவாயிலில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், தினக்கூலி அடிப்படையில் 16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து மரணமடைந்த தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com