தமிழ்நாடு

திருமணம் தகவல் மையத்தில் 2-வது திருமணத்திற்காக பதிவு செய்த பெண்ணிடம் ரூ.17 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி

Published On 2023-05-27 08:17 GMT   |   Update On 2023-05-27 08:17 GMT
  • பூங்கோதையின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தியை ஒன்று அனுப்பினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கோதைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள கோவிந்த செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவயோகி. இவரது மனைவி பூங்கோதை (வயது38). சிவயோகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக பூங்கோதை காவேரிபட்டணத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக தனியார் திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் பூங்கோதையின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தியை ஒன்று அனுப்பினார். அதில் அவர் தான் துபாயில் வேலை செய்வதாகவும், பூங்கோதையை 2-வது திருமணம் செய்து கொள்ள தயார் என்று அனுப்பி வைத்தார். மேலும் தான் தற்போது துபாயில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தன்னை பரிசோதித்த சுங்க துறை அதிகாரிகள் தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணத்திற்கு அபராதம் விதித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பூங்கோதை மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 500-யை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அந்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை பூங்கோதை அறிந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கோதைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News