தமிழ்நாடு

அரசு தொடக்கப்பள்ளியில் தேசியக்கொடி பறப்பதை காணலாம்.

கன்னியாகுமரி அருகே அரசு பள்ளியில் இரவில் பறந்த தேசியக்கொடியால் பரபரப்பு

Published On 2022-11-30 06:14 GMT   |   Update On 2022-11-30 06:14 GMT
  • பொதுமக்கள் பொதுவாக வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவது பரவலாக தென்படவில்லை.
  • ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி இரவு நேரத்தில் பறந்திருப்பது சட்டப்படி இல்லாவிட்டாலும் மரபுப்படி தவறே.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால் விளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர் அணி வகுப்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது மாணவர்களும் ஆசிரியர்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் மாலை 6 மணிக்கு இறக்க வேண்டிய தேசியக்கொடி இறக்கப்படாமல் இரவு முழுவதும் பறந்து கொண்டிருந்ததாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்த பின்னர் கொடி இறக்கப்பட்டது.

இந்த நிலையில் தேசியக்கொடி இரவில் பறப்பது அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து உயர்நீதிமன்ற வக்கீல் அப்துல் கலாம்ஆசாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தேசியக்கொடி திறந்த வெளியில் இருந்தால், பொதுமக்களால் ஏற்றப்பட்டால் அது இரவு முழுவதும் பறக்கலாம். ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் தேசியக்கொடியை இரவில் கூட பறக்க அனுமதிக்கும் வகையில் 2002-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் திருத்தியது. முன்னதாக, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இடையே மட்டுமே கொடியை ஏற்ற முடியும் என்ற சட்டம் இருந்தது.

விமான நிலையம் ரெயில் நிலையம் போன்ற இடங்களில் பகலை போன்று இரவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் இருக்கும் பகுதியில் தேசியக்கொடி இரவிலும் பறக்கலாம் என்று அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்தபோது இரவு நேரத்தில் கொடியை இறக்க வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் அதில் இடம் பெறவில்லை. எனினும் பொதுமக்கள் பொதுவாக வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவது பரவலாக தென்படவில்லை.

ஆனால் ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி இரவு நேரத்தில் பறந்திருப்பது சட்டப்படி இல்லாவிட்டாலும் மரபுப்படி தவறே.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News