இந்தியா

கணவர் விஷம் வைத்து கொலை - இழப்பீடு பணத்திற்காக புலி தாக்கியதாக நாடகமாடிய மனைவி

Published On 2025-09-13 11:36 IST   |   Update On 2025-09-13 11:36:00 IST
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார்.
  • கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த சிக்க ஹெஜ்ஜுவை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 54). விவசாயி. இவரது மனைவி சல்லாபுரி (48).

இவர்களின் கிராமத்தை சேர்ந்த சிலர் வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என பேசிக்கொண்டு இருந்தனர்.

இதனைக்கேட்ட சல்லாபுரி தனது கணவரை கொலை செய்து காட்டில் வீசி விட்டால் பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டார்.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார். கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் ஹினாசுரு போலீஸ் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் தனது கணவரை காணவில்லை எனவும், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது புலி அவரை கடித்துக்கொன்று வனப்பகுதியில் இழுத்துச் சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடசாமியை தேடி வந்தனர். வயல்வெளியில் புலி வந்து சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.

கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் வெங்கடசாமியின் உடல் கிடந்தது.

மேலும் அவரது உடலின் தோலின் நிறம் மாறி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சல்லாபுரியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காட்டு விலங்கு தாக்கி இறந்தால் அதிக அளவு அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என நம்பி கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சல்லாபுரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News