பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கிய உ.பி. அரசு
- பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.
- இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும்.
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். அந்த 10 நிமிடங்களில் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்து காட்ட வேண்டும். இதற்காக இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும்.
மாணவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தும் வகையில் செய்தித்தாள்களில் இருந்து 5 கடினமான சொற்களை தேர்வு செய்து இன்றைய சொல் என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும். செய்தித்தாள் தலையங்கத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் குழு விவாதம் நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவனத்திறனை மேம்படுத்தவும், சமூக விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.