அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 7 நோயாளிகள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
- நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மேலும் 7 நோயாளிகள் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள். இதனால் 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறுகையில், "மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளனர்" என்றார்.
இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.