உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே சாலை சீரமைப்பு பணியின் போது மணல் திருட்டு - கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் புகார்

Published On 2023-01-02 08:53 GMT   |   Update On 2023-01-02 08:53 GMT
  • நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.

மணல் திருட்டு

நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி கிராம பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப் பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊராட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அம்பை

அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் ஆறுமுகப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த மனுவில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தகவலின் பேரில் ரூ.7,500 செலுத்தினேன்.

ஆனால் என்னிடம் அதிக அளவு பணம் பெறப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் ஆகியும் அதற்கான ரசீதுகள் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

பட்டா நிலம்

நாங்குநேரி தாலுகா மேல முனைஞ்சிபட்டியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பு பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் நாங்கள் வீடு கட்டாமல் வைத்துள்ளோம். தற்போது அந்த பட்டாவை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பெண் புகார்

மேலப்பாளையத்தை சேர்ந்த முகம்மது நஸ்ரின் சிபிகா (வயது 23) என்பவர் கொடுத்த மனுவில், நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது ரூ.1 லட்சமும், சீர்வரிசை பொருட்களும் எனது குடும்பத்தினர் கொடுத்தனர்.

தற்போது எனது கணவர் தொழில் செய்ய பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு என்னை துன்புறுத்தி வருகிறார். எனவே அவரது குடும்பத்தினரும் என்னை துன்புறுத்தி வருகிறார்கள். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News