லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
அடுத்தடுத்து 2 வாகனங்கள் மீது சுற்றுலா பஸ் மோதல் ஒருவர் பலி-2 பேர் படுகாயம்
- சேலத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.
- அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் மீது மோதியது.
ஆத்தூர்:
சேலத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே புகுந்தது.
இந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். அப்போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பஸ் பயங்கரமாக மோதி பக்கத்தில் உள்ள சாலையில் புகுந்து சென்றது.
அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் சுற்றுலா பயணிகள் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் படுகாயம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
விபத்தில் சுற்றுலா பஸ்சில் இருந்த பயணிகள், கார் டிரைவர் உள்ளிட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பொதுமக்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் 3 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.