

தருமபுரி,
தருமபுரி நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சியின் வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்து, கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வழங்கினார்.
அரியலூர், திருப்பூர் மற்றும் புதிய மாவட்டங்கள் நீங்கலாக 29 மாவட்டங்களில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருந்த இவ்வளாகங்களை சீரமைக்கும் பொருட்டு 29 வணிக வளாகங்களில் பெரம்பலூர் மாவட்ட வணிக வளாகம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாலும், நாகப்பட்டினம் மாவட்ட பூமாலை வணிக வளாகம் முழுவதுமாக சேதமடைந்ததாலும், முதற்கட்டமாக இவற்றில் 26 மாவட்ட அளவிலான பூமாலை வணிக வளாகங்களை புனரமைத்து, பழுதுநீக்கம் செய்து, ஒரே மாதிரியான வண்ணம் பூசிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, 26 மாவட்ட பூமாலை வணிக வளாகங்கள் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இப்புனரமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள 25 கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், நகர்மன்றத் தலைவர் லட்சுமி, மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹி முகமது நசீர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.