

தருமபுரி,
தருமபுரி, திருப்பத்தூர் சாலையில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும் 3500- க்கும் மேற்பட்ட மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
தருமபுரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வரும் மாணவிகள் தருமபுரி புறநகர் பேருந்து மற்றும் நகரப் பேருந்துகளில் பயணித்து பஸ் நிலையத்தை அடைந்து 8 மணி முதலே பள்ளிக்கு வர தொடங்குவர்.
இந்த சமயங்களில் அவ்வையார் அரசு மகளிர் பள்ளி நுழைவாயிலுக்கு எதிரில் சில வாலிபர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவி களிடம் கேலி கிண்டல் செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நுழைவாயில் சுவரில் சில ரோமியோக்கள் பிறந்தநாள் போஸ்டர் அடித்து அதில் உப்பு இருந்தால் தானே உணவு சுவைக்கும், நட்பு இருந்தால் தானே வாழ்க்கை இனிக்கும் என்று பள்ளி சுவற்றில் ஒட்டி வைத்துள்ளனர்.
இதனைக் கண்ட மாணவி களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மாணவிகள் மட்டும் படித்து வரும் பள்ளிக்கு எதிரே காலை , மாலை இரு வேலையும் மாணவிகளுக்கு காதல் அம்பை தொடுத்து கேலி. கிண்டல் செய்து வரும் நிலையில் பள்ளி சுவற்றில் இது போன்ற பிறந்தநாள் போஸ்டர்களை அடித்து ஒட்டி மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த ரோமியோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.