திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய மதபோதகர் கைது
- மில்டனின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர்.
- ஆத்திரமடைந்த மில்டன் மாணவி மற்றும் அவரது பெற்றோரை அவதூறாக பேசி குடும்பத்துடன் எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
நெல்லை:
நெல்லை ஆயுதப்படை அருகே கோரிப்பள்ளம் அன்பகத்தை சேர்ந்தவர் மில்டன் கனகராஜ் (வயது 26). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இறையியல் கல்லூரியில் படித்துள்ளார். தற்போது கே.டி.சி நகர் பகுதியில் ஒரு ஆலயத்தில் பயிற்சி போதகராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி மாணவி ஒருவருடன் மில்டன் கனகராஜ் நெருங்கி பழகி உள்ளனர். அப்போது மில்டன் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் செல்போன் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனிடையே மில்டனின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். இதனை அறிந்த மாணவி மில்டனிடம் வேறு பெண்ணை திருமணம் செய்வது குறித்து கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மில்டன் மாணவி மற்றும் அவரது பெற்றோரை அவதூறாக பேசி குடும்பத்துடன் எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தனர். அவர்களது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மில்டனை கைது செய்தனர்.