உள்ளூர் செய்திகள்

5 மாதங்களுக்கு பிறகு முக்கடல் அணை நீர்மட்டம் பிளஸ் நிலைக்கு வந்தது

Published On 2023-10-02 07:08 GMT   |   Update On 2023-10-02 07:08 GMT
  • புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகர் மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து தான் நாகர் மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழையை நம்பி தான் உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் பொய்த்துப்போனதால், முக்கடல் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது.

இதனால் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதம் மழை கொட்டிய போதும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. முக்கடல் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் பிளஸ் நிலைக்கு வந்தது. 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News