உள்ளூர் செய்திகள்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்

Published On 2022-06-28 09:50 GMT   |   Update On 2022-06-28 09:50 GMT
  • தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் நடந்தது.
  • கலெக்டர் தலைமையில் நடந்தது

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தாவது:

அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பொதுவி நியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் இப்பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மேலும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருந்திட வேண்டும்.

மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி., ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஏரி மற்றும் மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால் தூர்வாரப்பபட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்திட உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். பேரிடர் மீட்பு பணிக்காக வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு மற்றும் மத்தியக்குழு ஆகிய குழுக்களுக்கு தேவையான வசதிகளை செய்திட வேண்டும்.

பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திட வேண்டும் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளக் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை வெளியேற்றிட உரிய திட்டத்தை தயார் செய்யவும், பள்ளிக்கூடத்திலுள்ள பள்ளி அறைகளின் மாற்று சாவியினை கிராம நிர்வாக அலுவலர் வைத்திருக்கவும் மற்றும் பேரிடர் காலங்களை எதிர்கொள்ள அனைத்து அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

Tags:    

Similar News