கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலையும் உடைத்துள்ளனர்
கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கூவத்தூர் அருகே உள்ள வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அம்மனுக்கு தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்கத்திலான அணிகலன்களை அணிவித்து காணிக்கை செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கோவில் பூசாரி தினமும் காலை, மாலை வேளைகளில் விளக்கு போடுவது பின்னர் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாமிக்கு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட வேலைகள் முடித்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை கோவில் முன்பக்க கேட்டை 2 பூட்டுகள் போட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் கோவில் பூசாரிக்கு கோவில் கேட் திறந்து கிடப்பதாகவும், உண்டியலில் இருந்து காசுகள் சிதறி கிடைப்பதாகவும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்று பார்த்ததில் கருவறையிலுள்ள மாரியம்மன் சிலை கழுத்திலிருந்த சுமார் 22 கிராம் மதிப்பிலான தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே தடயம் ஏதும் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த எண்ணையை தடவி கைரேகை பதியா வண்ணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com