Aayiram Porkaasukal(3.25 / 5)
கதைக்களம்
தன் ஊரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன் மாமா சரவணன் தங்கி இருக்கும் ஊருக்கு செல்கிறார் விதார்த். ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வரும் சரவணன், தன் வீட்டிற்கு பின்னால் கழிப்பறை கட்டுவதற்கு ஜார்ஜ் மரியானை வைத்து பள்ளம் தோண்டுகிறார்.
அப்போது திடீரென தங்க காசுகள் அடங்கிய புதையல் கிடைக்கிறது. மூன்று பங்காக பிரித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது, பிரச்சனை ஏற்பட்டு ஜார்ஜ் மரியானை சரவணன் மற்றும் விதார்த் அடித்து விடுகிறார்கள். கோமா நிலைக்கு செல்லும் ஜார்ஜை தவிர்த்து இரண்டு பங்காக புதையலை பிரிக்க நினைக்கிறார்கள். ஆனால், புதையல் தகவல் படிப்படியாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவர, பல பங்காக பலரும் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.
இறுதியில் பொற்காசுகள் உள்ள புதையலை சரவணனும், விதார்த்தும் எப்படி பங்கு பிரித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் விதார்த்துக்கு இந்த படம் மீண்டும் ஒரு சிறந்த படமாக அமைந்துள்ளது. புதையலை பாதுகாக்க அவரது யதார்த்த பேச்சும், நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.
கதாநாயகியாக வரும் அருந்ததி நாயர் வசீகர அழகுடன் படத்தின் காட்சிகளுக்கு மெருகு சேர்க்கிறார். படத்தில் பெரிய பலம் பருத்திவீரன் சரவணன். புதையலை கைப்பற்ற நகைச்சுவை உணர்வு கலந்த அவரின் சுவாரஸ்ய பேச்சும் நடிப்பும் கைத்தட்டல் வாங்குகிறது.
பள்ளம் தோண்ட வந்த இடத்தில் புதையலை கண்டு பிடித்து பங்கு பிரிப்பதற்காக சரவணனுடனும், விதார்த்துடனும் ஜார்ஜ் மரியானின் போராட்ட காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. நான் இப்பவே போலீசுக்கு போகிறேன். என ஹலோ கந்தசாமி வசனம் பேசி குணிந்தபடி வேகமாக டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகளில் அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.
இயக்கம்
திகில் மற்றும் கொலை, கொள்ளை, ரத்த வெறி என சமீபத்தில் திரைக்கு வந்துள்ள சினிமாக்களுக்கு மத்தியில் புதையலை வைத்து குதூகலப்படுத்தும் விதத்தில் காமெடி ரசனையுடன் குடும்ப பொழுதுபோக்கு படமாக கொடுத்த இயக்குனர் ரவி முருகையாவுக்கு பாராட்டுகள். எந்த காட்சியும் சோர்வடையாமல் முழு முழுக்க சிரித்துக்கொண்டே ரசிக்க வைத்திருக்கிறார்.
இசை
ஜோகனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
பானு முருகனின் கிராமிய ஒளிப்பதிவு சிறப்பு.
புரொடக்ஷன்
கே.ஆர்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

