Aadujeevitham

Aadujeevitham

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அடிமையானவனனின் கதை
Published on
Aadujeevitham(3.5 / 5)

கதைக்களம்

நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் கேரளத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.மேலும் குடும்ப சூழ்நிலைக் காரணமாக பிரித்விராஜ் {நஜீப்} தனது நண்பனின் மாமா மூலம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக செல்கிறார். உதவியாளர் வேலைக்காக செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் செல்கிறார். ஆனால் அங்கு சென்றதும் அவரை அழைத்து சென்று அடிமை வேலையாளாக நடத்த தொடங்குகின்றனர்.

பெரும் சித்திரவதையை அனுபவித்து அந்த முதலாளியிடம் இருந்து தப்பித்து சவுதி பாலைவனத்திற்கு வந்தடைகிறார். மீண்டும் தன் ஊருக்கு சென்று குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று பிரித்வி ஆசைப்படுகிறார். ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் தின்டாடுகிரார்.

இறுதியில் பிரித்விராஜ் தன் ஊருக்கு சென்றாரா? பாலை வனத்தில் இருந்து தப்பித்து பிழைத்தாரா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

நஜீபாக நடிகர் பிரித்விராஜ் மாறி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நஜீப் கதாப்பாதிரத்திற்கு ஏற்ப அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகளும், சாலை கண்ணில் தெரியவில்லையே என பித்து பிடித்தது போல் திரியும் காட்சிகளும் நம் மனதை உறைய வைக்கிறது. ஜிம்மி ஜீன் லூயிஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அமலா பாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

இயக்கம்

பென்யமீன் எழுத்தில் உருவான ஆடு ஜீவிதம் நாவலை தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிளெஸ்ஸி. அடிமையாக நஜீப் பட்ட கஷ்டங்களை தத்ரூபமாக எடுத்து இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் பிரித்விராஜ் நடந்துக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. அது பார்வையாளர்களிடையே சலிப்பை தட்டுகிறது. படத்தின் நேரத்தை சிறிது குறைத்திருக்கலாம். திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இசை

ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாலைவனத்தில் திரியும் கதாநாயகனுக்கு இருக்கும் பரிதவிப்பை சிறப்பாக இசையில் பார்வையாளர்களிடம் கடத்தியுள்ளார்.

ஒளிப்பதிவு

சுனில் கே எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாக ஹாலிவுட் தரத்திற்கு கையாண்டு இருக்கிறார். பாலை வனத்தின் அழகை ஒரு பக்கம் காமித்தாலும் மற்றொரு பக்கம் பாலைவனத்தின் பயங்கரத்தையும் சிறப்பாக காட்சியமைத்துள்ளார். பாலைவனத்தில் பார்வையாளர்களை வாழவைத்து இருக்கிறார் என்று சொல்லலாம். பாலைவன புயல் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பு

ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கூடுதல் பலத்தை படத்திற்கு கொடுத்து இருக்கிறது.

தயாரிப்பு

ஆடு ஜீவிதம் படத்தை பிளெஸ்ஸி , ஜிம்மி ஜீன் லூயிஸ், ஸ்டீவன் ஆடாம்ஸ் மற்றும் கே.ஜி. ஆப்ரஹம் இணைந்து தயாரித்துள்ளனர்.

வீடியோக்கள்

ஆடு ஜீவிதம்

X

Maalai Malar
www.maalaimalar.com