search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MS Dhohi"

    • கடைசி கட்ட நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டு ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.
    • இவர் கொல்கத்தா அணியில் விளையாடும்போது தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசியவர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 23-ந்தேதி (நேற்று முன்தினம்) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 207 ரன்கள் குவித்தது.

    பின்னர் இந்தியா 19.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சூர்யகுமார் அவுட்டானதும் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ரிங்கு சிங் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை ரிங்கு சிங் ஆஃப்சைடு பவுண்டரிக்கு விரட்டினர். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. அதன்பின் அடுத்த மூன்று பந்துகளில் இந்தியா விக்கெடடுகளை இழந்தது. இதில் இரண்டு ரன்அவுட் ஆகும்.

    கடைசி பந்தை ரிங்கு சிங் சந்தித்தார். இக்கட்டான நேரத்தில் அவர் நெருக்கடிக்கு உள்ளாகவில்லை. நிதானமாக பந்தை எதிர்கொண்டு லாங்-ஆன் திசையில் சிக்ஸ் விரட்டினார். இந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது. இருந்தபோதிலும், இக்கட்டான நிலையில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ரிங்கு சிங்கிடம் திறமையும் நிதானமும் இருக்கிறது என விமர்சகர்கள் பாராட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தல தோனியிடம் இருந்துதான், இக்கட்டான நிலையை எப்படி எதிர்ககொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-

    என்னுடைய நிதானம் ரகசியம், எம்.எஸ். தோனியிடம் கலந்துரையாடல் செய்ததன் மூலம் கிடைத்ததுதான். அவரிடம் நான் உரையாடியபோது, முடிந்த அளவிற்கு நிதானமாக இருக்க முயற்சிக்க வேண்டும். அதேபோல், கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கு நேராக மிட்ஆன்- மிட்ஆஃப் திசையில் ஷாட் செலக்சன் இருக்க வேண்டும் என்றார். அந்த வகையில்தான் இந்த போட்டியில் நிதானத்தை கடைபிடிக்க முயற்சி செய்தேன்.

    இவ்வாறு எம்.எஸ். தோனி அறிவுரை வழங்கியது குறித்து ரிங்கி சிங் தெரிவித்துள்ளார். ஆனால், தோனி எப்போது அறிவுரை வழங்கினார் என்பதை ரிங்கு சிங் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடைசி பந்து சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறித்து கவலை இல்லை. அணியின் வெற்றிதான் முக்கியம் என்றார். 

    இதுகுறித்து ரிங்கி சிங் கூறுகையில் "நான் சிக்ஸ் அடித்த பந்து நோ-பால் என்று கருதவில்லை. வெளியில் இருந்து அக்சார் பட்டேல்தான் நோ-பால் என்றார். அதன்பின்தான் நோ-பால் என்று எனக்குத் தெரியும். வெற்றிக்கான சிக்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்பது பெரிய விசயம் அல்ல. நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றோம். இதுதான் விசயம்" என்று ரிங்கு சிங் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டியில் கொல்கததா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங், தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசினார். அப்போது தேர்வாளர்கள் கண்ணில் பட்டு இந்திய அணிக்கு தேர்வானார்.

    ×