search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bindu"

    கடும் எதிர்ப்புக்கிடையில் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக பிந்து, கனகதுர்கா பேட்டி அளித்துள்ளனர். #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். 2-வது முறையாக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

    இவர்கள் முதலில் சபரிமலை சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியபோது தலைமறைவாகி விட்டனர். அப்போது அவர்கள் மாயமாகிவிட்டது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. ஆனால் அந்த பெண்கள் 2 பேரும் எங்கே சென்றனர் என்ற மர்மம் தற்போது விலகி உள்ளது.

    பிந்துவும், கனகதுர்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்து உள்ளனர். அந்த லாட்ஜ் உரிமையாளருக்கு முதலில் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வந்த பிறகு தான் அதை பார்த்து லாட்ஜ் உரிமையாளர், பிந்துவும், கனகதுர்காவும் தங்கள் லாட்ஜில் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டுள்ளார்.

    அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பிந்து, கனகதுர்கா அறையை பதிவு செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    தற்போது கனகதுர்காவும், பிந்துவும் கொச்சியில் உள்ள போலீஸ் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் பிந்து கூறியதாவது:-

    நாங்கள் ஆம்புலன்சில் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறுவது தவறு. பக்தர்களோடு, பக்தர்களாக நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்தோம். இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதும் தவறு. எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை.

    பா.ஜனதா நடத்திய மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அதனால் என்னை பா.ஜனதாவைச் சேர்ந்தவர் என்று கூற முடியுமா? அதேபோல சபரிமலைக்கு சென்றதால் நான் கம்யூனிஸ்டும் கிடையாது. கம்யூனிஸ்டு என்றாலும் அவர்கள் பக்தர்களாக இருக்கக்கூடாதா?. நான் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன். ஆனால் 8 ஆண்டுகளாக அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

    கடந்த 24-ந் தேதி சபரிமலை சென்றபோது எங்களால் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்த பிறகு தான் வீடு திரும்ப வேண்டும் என்ற உறுதியோடு உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் மாறி, மாறி வசித்தோம். போலீசார் வற்புறுத்தி எங்களை அழைத்து செல்லவில்லை. நாங்கள் தான் போலீசின் உதவியை நாடினோமே தவிர அவர்கள் எங்களை நாடவில்லை. பம்பை சென்று போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். போலீசார் பாதுகாப்பு வழங்கினார்கள். தற்போது ஊரில் போராட்டம் நடப்பதால் ஒதுங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் சபரிமலை சென்றேன். இதில் எந்த வற்புறுத்தலும் கிடையாது. பிந்துவுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. இதனால் அவருடன் சேர்ந்து சென்று சாமி தரிசனம் செய்தேன். நான் கணவர், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நான் சபரிமலை செல்வதில் விருப்பம் இல்லை. எனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் சபரிமலை சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaTemple
    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பக்தர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பெண்களை அழைத்துச் செல்வதற்காக போலீசார் 7 நாட்களாக ரகசியமாக திட்டமிட்டது தெரியவந்துள்ளது. #Sabarimala #KanakaDurga #Bindu
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதிக்கு பிறகு கேரள அரசு எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. சபரிமலை கர்ம சமிதி, அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி எந்த பெண்களையும் போலீசாரால் சன்னிதானம் அழைத்து செல்லமுடியவில்லை.

    இதனை பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் பலரும் விமர்சித்தனர். இது ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று கூறப்பட்டது.

    இதையடுத்து மகரவிளக்கு சீசன் காலத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல அரசு முடிவு செய்தது. இதற்கு பொருத்தமான நபர்களை கண்டறியும் பணியில் கேரள போலீசார் ஈடுபட்டனர்.

    அவர்களின் பார்வையில் பட்டவர்கள் மலப்புரம் கொயிலாண்டியை சேர்ந்த பிந்து (வயது 40), கோழிக்கோட்டை சேர்ந்த கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள். இவர்களில் பிந்து கல்லூரி ஆசிரியை, மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர ஆதரவாளர். அவரது தோழி கனகதுர்காவும் இதே சிந்தனை கொண்டவர். கூட்டுறவு ஊழியர்.

    பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலைக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். சன்னிதானம் அருகே போராட்டக்காரர்கள் தடுப்பு சுவர் போல திரண்டு இரண்டு பெண்களையும் வழிமறித்தனர்.

    இதனால் சன்னிதானம் செல்லமுடியாமல் பிந்துவும், கனகதுர்காவும் பாதியிலேயே வீடு திரும்பினர்.

    சன்னிதானம் செல்ல முடியாமல் திரும்பிய பிந்து, கனகதுர்கா இருவரும் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. திடீரென அவர்கள் மாயமாகி விட்டனர். உறவினர்கள் அவர்களை தேடிய போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்ற போது ஆஸ்பத்திரியில் அவர்கள் இல்லை.

    எனவே அவர்கள் இருவரும் போராட்டக்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்து அமைப்புகளும் இதை நம்பினர்.

    போராட்டக்காரர்களின் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கேரள போலீசார் திட்டமிட்டனர். அதன்படி பிந்து, கனகதுர்கா இருவரையும் மீண்டும் சபரிமலை அழைத்து செல்ல போலீசார் ரகசிய திட்டம் வகுத்தனர்.

    சன்னிதானம் செல்ல போலீசார் முடிவு செய்த நாள் ஜனவரி 2. இந்த நாளில் சபரிமலையில் கூட்டம் அதிகம் இருக்காது என்று போலீசார் கருதினர். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

    ஜனவரி 1-ந்தேதி கேரள அரசு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் மனித சுவர் போராட்டம் நடத்தியது. இதில் யார்- யார் பங்கேற்கிறார்கள் என்பதை பார்க்க போராட்டக்காரர்கள் அவரவர் ஊருக்கு செல்வார்கள் என போலீசார் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி போராட்டக்காரர்கள் பலரும் ஊர் திரும்பினர்.

    இச்சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட போலீசார் கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர், உளவுத்துறை டி.ஐ.ஜி. சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலை அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

    இத்திட்டத்தை நிறைவேற்ற தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சாதாரண உடையில் பம்பை வந்தனர். நேற்று அதிகாலை வந்து சேர்ந்த போலீஸ் படை பிந்து, கனகதுர்கா இருவருக்கும் சாதாரண உடையில் பாதுகாப்பு அளித்தனர்.

    சாதாரண போலீசாரின் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்லும் டிராக்டர் பாதையில் அழைத்து செல்லப்பட்டனர். அதிகாலை 1.30 மணிக்கு இவர்களின் பயணம் தொடங்கியது. 3 மணிக்கு பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்றடைந்தனர்.

    அப்போது கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் பாடப்பட்டது. இந்த நேரத்தில் 18 -ம் படியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊழியர்கள் கோவிலின் பின்பகுதியில் உள்ள வாயில் வழியாக செல்லத்தொடங்கினர்.


    அவர்களுடன் பிந்துவும், கனகதுர்காவும் இணைந்து கொண்டனர். அப்போது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு நின்ற உயர் அதிகாரிகள் அவர்களை விரட்டினர்.

    எதிர்ப்பு அகன்றதும் பிந்து, கனகதுர்கா இருவரும் மிக எளிதாக சன்னிதானம் சென்றடைந்தனர். அங்கு சாமி தரிசனமும் செய்தனர். இதனை அர்ச்சகர்கள், தந்திரிகள் யாரும் கவனிக்கவில்லை.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானத்தில் தரிசனம் முடிந்து பம்பை திரும்பிய பின், பத்திரிகையாளர்களை சந்தித்து தரிசனம் செய்ததை கூறிய பிறகே இந்த விபரம் பக்தர்களுக்கு தெரியவந்தது.

    இச்சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என்றும் இதற்காக அவர்கள் கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டு காய் நகர்த்திய விபரத்தையும் அறிந்து கொண்ட பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தற்போது அவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளில் போலீசார் இறங்கி உள்ளனர். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்கள் இருவரை சன்னிதானம் வரை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்துவிட்டோம் என்று அரசு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. #Sabarimala #KanakaDurga #Bindu
    ×