பிரதமர் மோடியுடன் காமன்வெல்த் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு

காமன்வெலத் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். தனது வீட்டுக்கு வரழைத்து காமன்வெலத் வீரர், வீராங்கனைகளை அவர் பாராட்டினார்.
பிரதமர் மோடியுடன் காமன்வெல்த் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

22-வது காமன்வெலத் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் 208 இந்திய வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் கிடைத்தது.

மல்யுத்தத்தில் தான் அதிகபட்சமாக 6 தங்கம் உள்பட 12 பதக்கமும், பளு தூக்குதலில் 3 தங்கம் உள்பட 10 பதக்கமும் கிடைத்தது. தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் 3 தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்று முத்திரை பதித்தார். அவர் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தங்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.

இந்த நிலையில் காமன்வெலத் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்தனர். தனது வீட்டுக்கு வரழைத்து காமன்வெலத் வீரர், வீராங்கனைகளை அவர் பாராட்டினார்.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். வீரர், வீராங்கனைகள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com