

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கவுதம் கம்பீரை நீக்கினால் வீரர்களை கையாள்வது கடினமாகிவிடும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் போன்ற ஒரு பயிற்சியாளரை நீக்கினால், அணியில் உள்ள நட்சத்திர வீரர்களைக் கையாள்வது பிசிசிஐ-க்கு மிகவும் கடினமாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்த அவர்,
“இதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், கௌதம் கம்பீர் போன்ற ஒரு தலைமைப் பயிற்சியாளர் நீக்கப்பட்டால், வீரர்களைக் கையாள்வது மிகவும் கடினமாகிவிடும். அவர் ஒரு நேர்மையான மனிதர்; உண்மையை உள்ளபடியே கூறுவார், அவர் வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் அவரை பிடிப்பதில்லை. மனதில் எந்த துரோக எண்ணத்தையும் வைத்திருக்கமாட்டார்.
அணி நலன் கருதி, விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மா போன்ற பெரிய வீரர்களை நீக்க வேண்டும் என்றாலும், அந்தத் துணிச்சல் கம்பீருக்கு உள்ளது. அவர் பணத்தை அல்ல, கிரிக்கெட்டை நேசிக்கிறார். அவருக்குப் பணம் தேவையும் இல்லை, பணம்தான் முக்கியம் என்று அவர் ஒருபோதும் இருந்ததில்லை.” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய டெஸ்ட் அணியின் சரிவுக்கு கம்பீரை மட்டும் குற்றம் சொல்லக் கூடாது. பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரிப்பதை நிறுத்தியதே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றதில் இருந்தே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சரியாக செயல்படவில்லை என்றும், ரோகித், விராட் போன்ற வீரர்கள் ஓய்வை அறிவித்தார்கள் என விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், முனாஃப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.