

ஐ.பி.எல். 2026 டி20 தொடரின் எலிமினேட்டர் சுற்றில் நேற்று (மே 27) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி ஆடிய பிரமிக்க வைக்கும் இன்னிங்ஸ் மூலம், கிரிக்கெட்டின் மிகவும் அதிரடியான இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்ற தனது பெயரை மேலும் உறுதிப்படுத்தினார்.
15 வயதான தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 29 பந்துகளில் 97 ரன்களை விளாசி அதிரடி பேட்டிங்கில் அசத்தினார். இவரது இந்த அபாரமான ஆட்டத்தில் ஐந்து பவுண்டரிகளும், வியக்க வைக்கும் வகையில் 12 சிக்சர்களும் அடங்கும். இது ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.
அந்த இளம் வீரர் வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐ.பி.எல். பிளேஆஃப் வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்னர், 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குவாலிஃபையர் 2 போட்டியில் சுரேஷ் ரெய்னா இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
நேற்றைய போட்டியில் வெறும் 29 பந்துகளில் 97 ரன்களை சூர்யவன்ஷி எடுத்தாலும், சதம் அடிக்காதது அவருக்கு வருத்தமே. அதை நாம் களத்தில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், சூர்யவன்ஷி தனது சமூக வலைத்தள பக்கத்தில் "Hungry for More"- பசி தீரவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இவரது பதிவுக்கு கிரிக்கெட் வீரர் அஷ்வின்,"டேய் டேய் டேய் டூ மச் டா தம்பி.. வியக்கத்தக்க ஆட்டம்" என குறிப்பிட்டிருந்தார்.